ismayil singam.blogspot.com

Wednesday, February 1, 2012

எளிய வைத்திய முறைகள்… உடல் மெலிந்தவர்களுக்கு…

பொதுவாக உடலில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசிய சத்துக்களும் வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் போதுமான அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இச்சத்துக்கள் குறையும்போது உடல் பலவீனமடைகிறது. இவற்றைப் போக்க மருந்து மாத்திரைகள் உண்பதை விட உணவில் அதிகளவு காய்கறி பழங்கள் கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவில் மோர் சாப்பிடவேண்டும்.
· வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதுபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் சிறிது சுக்கு தட்டிப்போட்டு காய்ச்சி அருந்த வேண்டும். வாழைப்பழம், கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
· நோயினால் பாதிக்கப்பட்டு உடல் பலம் குறைந்தவர்கள் அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து அரைத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் கலந்து காலை மாலை டீ காஃபிக்கு பதிலாக அருந்தி வந்தால் உடல் பலவீனம் நீங்கும்.
· பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
· பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.
· சோற்றுக் கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
· தூதுவளை பொடியை தேனில் கலந்து 1 ஸ்பூன் அளவு காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் நன்கு பசியைத் தூண்டும். இளைத்த உடல் தேறும். இதை உடல் பலவீனமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
· கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.
· தேவயான அளவு பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.
· முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.
· உடல் பலவீனமடைந்து தேறாமல் நோஞ்சான் போல் உள்ளவர்களின் உடல் பலமடைய தூதுவளை, பசலைக்கீரை சிறந்த நிவாரணி. இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டு வந்தால் உடல் பலமும், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.
· முதல் வாரத்தில் தூதுவளைக்கீரை, அடுத்த வாரத்தில் பசலைக்கீரை..
அதேபோல் அடுத்த வாரத்தில் தூதுவளைக் கீரை என மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கி தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment